கைவல்யம்


அதிகாலையில்
எழுந்திருக்க வேண்டுமென்றுதான்
அலாரம் வைத்தேன்
மனம்
எழுந்து என்ன சாதிக்கப் போகிறாம்
என்றது
கண் அசந்தேன்
விழித்த போது மணி ஆறு
முன்னமே எழுந்திருக்கலாமோ
என மனம் வருந்தியது
மனமே நொடிக்கு ஒரு தடவை
நிலை மாற்றி என்னை
அவஸ்தைபட வைப்பதில்
உனக்கு என்ன சுகமோ
இதோ கிளம்பியாச்சி
முதலில் கோவில்
பிறகு அலுவலகம்
எதிரில் ரகுவா
பேச்சிலேயே நாத்திகனாக
மாற்றி விடுவானே
சிறுநீர் கழிப்பது போல்
வேலி பக்கம் ஒதுங்கி
தப்பித்தேன்
இதே வேலையில்
ரொம்ப நாள்
குப்பை கொட்ட முடியும்
என்று தோன்றவில்லை
இளமை கொடுத்த சிறகை
முதுமை பறித்துவிட்டது
வியாதியின் கூடாரம் தானே
இந்த உடல்
மருந்தகத்திலும் கணக்கு உண்டு
மளிகை கடையிலும் கணக்கு உண்டு
உருப்படியா வேலை செய்ய
உடல் ஒத்துழைக்கவில்லை
ஒண்ணாம் தேதிக்காக
வேலை செய்வது
சுமையாக இருக்கிறது
சித்திரகுப்தன் எனது
கோப்புகளை எடுத்துப்பார்த்தால்
சிரிப்பான்
இத்தனை சிலுவைகளை
இவன் ஒருவனே
சுமக்கிறானே என்று.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக